நீதிபதி சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் CID இற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜா அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளித்தார்.
பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் தாம் வழங்கிய தீர்புகளை தொடர்ந்து தமக்கு மரண அச்சுறுத்தல் வந்த நிலையில் தான், இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இந்த அச்சுறுத்தல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என்று மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து சட்டதரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதித்துறையைப் பாதுகாப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே மேற்படி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



