ஸ்கொட்லாந்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஸ்கொட்லாந்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கொட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோதிக் கொண்ட இரண்டு ரயில்களில் ஒன்று, 100 ஆண்டுகள் பழமையான ஸ்கொட்ஸ்மேன் புகையிரதம் என்பதுடன் 100 மைல் வேகத்தில் பயணம் செய்த முதல் நீராவி புகையிரதம் ஆகும். இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக் காரணமாக அவிமோர் புகையிரத நிலையத்தில் புகையிரதங்கள் நிறுத்தப்பட்டு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



