லிபியாவை தாக்கிய புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் 2 ஆயிரம் பேர் பலி!

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் டேனியல் புயல் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடலை டேனியல் புயல் கடுமையாக தாக்கியது. இதனால், லிபியாவின் கடற்கரை நகரங்களில் கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் டெர்னா என்ற பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த அனைத்து வீடுகளில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே டெர்னா பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்களும் புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்துள்ளன. லிபியாவின் கிழக்கு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை, சூறாவளி, வெள்ள பாதிப்பால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஒசாமா ஹமத் தெரிவித்துள்ளார். அதே போல், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் உயிரிழந்ததால் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க அந்நாட்டு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.



