சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து ஜனாதிபதியின் விசேட அறிக்கை இன்று

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்று அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது இலங்கைக்கு கிட்டத்தட்ட 03 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிப்பு வசதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி வசதிக்கு 48 மாத கால அவகாசம் பொருந்தும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடனின் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிதியுதவி வசதி இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும் உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.



