அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தனியார் வங்கிகளுக்கு...!

வேலை நிறுத்தம் காரணமாக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் வழங்குவதில் தடை ஏற்பட்டால் அமைச்சுகள்இ திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச அரசியலமைப்பு சபைகளுக்கு தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (1) மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மேற்படி கணக்குகளை தனியார் வங்கிகளில் ஆரம்பிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வேலைநிறுத்தம் காரணமாக அரச வங்கிகள் ஊடான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாவிட்டால் கடன் கடிதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நிதி நடவடிக்கைகளும் தடைபடும் அபாயம் குறித்து விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தம் காரணமாக அரச வங்கிகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இவ்வாறான முறையில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.



