இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறு! நாசா விஞ்ஞானி ஒருவரின் சர்ச்சைக்குரிய தகவல்

இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறு என நாசாவின் இலங்கை வானியலாளர் கலாநிதி கவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தரின் தத்துவம் அறிவியலுடன் ஒத்துப்போகும் உலகளாவிய தத்துவம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இன்று புத்தரின் தத்துவம் மதமாக மாறிவிட்டது. அதனை பல்வேறு நபர்கள் திரித்து பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்.
எனவே இந்நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் புத்தரின் தத்துவத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்துகின்றார்.
வெளி நாட்டில் புத்தரின் தத்துவத்தைப் பின்பற்றுபவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை என கலாநிதி கவன் ரத்னதுங்க சுட்டிக்காட்டுகிறார்.
சிங்கள மொழியில் தொடர்பு கொள்ளும் முன்னணி ஊடக நிறுவனங்கள் கூட சில விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தத் தயங்குவதாக இணைய சேனலுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலாநிதி கவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய, குறிப்பிட்ட சிலரால் சமூகமயப்படுத்தப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான உண்மைகளை உள்வாங்கிய மக்களின் அச்சமும், அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தச் செல்லும்போது எழும் பொது எதிர்ப்புமே இதற்குக் காரணம் என்கிறார்.
புத்தரின் இலங்கைக்கான முதல் மற்றும் இரண்டாவது பயணங்கள் பற்றி அவர் ஒரு சிறப்புத் தகவலையும் வெளியிட்டார்.
கலாநிதி கவண் ரத்னதுங்க அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் கல்வி கற்ற தகுதிவாய்ந்த இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார்.
ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் தொடர்பான பிரபஞ்சத்தை ஆராயும் நாசாவின் வானியலாளர்கள் குழுவில் அவர் உறுப்பினராகவும் உள்ளார்.



