எரிபொருள் நெருக்கடி: பாகிஸ்தானில் புதிய கட்டுப்பாடுகள்
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசாங்கம், நாடு முழுவதும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவு அந்நாட்டு அமைச்சரவைப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருமண நிகழ்வுகளில் ஆடம்பரத்தைத் தவிர்க்கும் வகையில், ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்ற விதியும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரச துறைகளில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரச வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடும் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத வெளிநாட்டுப் பயணங்களுக்கு பொருளாதார வகுப்பில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் தேநீர் மற்றும் உணவுக்கான செலவுகள், உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும், கூட்டங்களை காணொலி வாயிலாக நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.