பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போலிச் செய்தி தொடர்பில் எச்சரிக்கை
பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
காலணி பாலிஷ் கொள்முதல் மற்றும் “ஹைடெரா” நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளுக்கான காலணி பாலிஷ் கொள்முதல், அரசாங்க கொள்முதல் விதிமுறைகளுக்கு அமைவாகவும் பத்திரிகை விளம்பரங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்த விலையை முன்வைத்த நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொலிஸ் அதிகாரிகளுக்கான உடலில் அணியும் கேமராக்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறை தற்போது மதிப்பீட்டில் உள்ளதாகவும், இதுவரை எந்த நிறுவனத்திற்கும் குத்தகை வழங்கப்படவில்லை என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதுடன், 15 நிறுவனங்கள் மாதிரிப் பொருட்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.