பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்..
வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமான போராட்டம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இதன்போது, இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
தபாலகம், நீதிமன்றம் மற்றும் பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணிகளுடன், பருத்தித்துறை வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட காணிகளையும் விடுவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, “இராணுவமே வெளியேறு”, “மக்களின் காணிகளை மக்களிடம் வழங்கு”, “தபாலக காணியிலிருந்து வெளியேறு” உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ள காணி மற்றும் வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட சில காணிகள் தற்போது இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டில் இருப்பதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தபாலகம் மற்றும் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், காணி கிடைக்காத நிலை காரணமாக அந்தத் திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே