மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அரசாங்கம் முதுகைக் காட்டியுள்ளது – விமல் வீரவன்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) செப்டம்பர் 12ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி (NFF) பங்கேற்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக இந்தப் பேரணியில் பங்கேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
SLPP விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பேரணிக்கு ஆதரவளிக்க தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் சூழ்நிலையில், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும், “திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதுகைக் காட்டியுள்ளது” என விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படும் ஏழு ஒப்பந்தங்கள், குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
அந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும், இதனால் நாட்டின் இறையாண்மை தொடர்பில் கவலைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பது தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மையமாகக் கொண்டதல்ல எனவும், தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்ட பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான தொடக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் “அபாயகரமான சர்வாதிகாரப் போக்கிற்கு” சவால் விடுப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான இத்தகைய ஒற்றுமை அவசியம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே