நவோதயாகம 50 வீடுகள் இன்று கையளிப்பு – பதுளைக்கு ஜனாதிபதி வருகை
பதுளை, பூணாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் இன்று (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
2023 மார்ச் 19ஆம் திகதி ஹல்துமுல்ல, பூணாகலை, கபரகல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பல குடும்பங்களின் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் அழிவடைந்தன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் மூன்றரை ஆண்டுகளாக மாகந்த தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் தமது வாழ்க்கையை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக்கு அமைய மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக நவோதயாகம வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக தமது சொந்த வீட்டுக்காக காத்திருந்த மக்களின் கனவு இன்று நனவாகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச் காணியுடன், 550 சதுர அடி பரப்பளவில் முழுமையான வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக சுமார் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே