“வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றன” – சஜித்
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தொடர்பிலும் நாடு அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாத்தறை–ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்கான உப பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சங்கைக்குரிய சப்புகஸ்தியாயே தர்மபால தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கும் நாடு தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எல் நினோ மற்றும் லா நினா போன்ற காலநிலை மாற்றங்கள் காரணமாக சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், பின்னர் அதிக மழையும் ஏற்படக்கூடும் எனவும், இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிடல் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக தற்போதுள்ள அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் இருந்து இலங்கை பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் பெருமளவான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பின்னரும், நாட்டில் நவீன அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை முழுமையாக உருவாக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து வலுவான அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
மேலும், இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது அரசியல் வேறுபாடுகளின்றி அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
பௌத்த சாசனத்தை பாதுகாப்பதுடன், ஏனைய மதங்கள் மற்றும் இனங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, அவர்களின் தனித்துவத்தைப் பேணும் நடவடிக்கைகள் நடைமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே