“எச்சரிக்கைகளை அதிகாரிகள் கவனிக்காததன் விளைவே இன்றைய விபத்து” – மக்கள் பிரதிநிதி
கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் புகையிரதக் கடவைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அதிகாரிகளால் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என மக்கள் பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், துறைசார் அமைச்சர் விமல் ரத்நாயக்கவுடனான சந்திப்பிலும் நேரடியாக எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1976ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகையிரதப் பாதை தொடர்பான சுற்றறிக்கையை தற்போதைய நிலைமைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை தாம் சுட்டிக்காட்டியதாகவும், கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பாக கிளிநொச்சி தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் அபிவிருத்தி மாற்றங்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வர்த்தமானி மாற்றங்களை மேற்கொள்வது அமைச்சரவையின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அதிக வேகத்தில் முன்னெடுக்கவுள்ளதாகக் கூறி, பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைப்பதன் அவசியம் தொடர்பான கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பாதுகாப்புக்காக குவிவு கண்ணாடிகள் (Convex Mirrors) பொருத்துவது தொடர்பாகவும் தாம் கருத்து தெரிவித்திருந்ததாகவும், அவற்றை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான நிலைமை கிளிநொச்சியில் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் ஒன்பது பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காணப்படுவதாகவும், இதனால் மக்கள் தினசரி உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவாகவே இன்றைய விபத்தும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம், விவேகானந்தர் நகர், உதயநகர், கிருஷ்ணபுரம், விநாயகபுரம் மற்றும் அம்பாள்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாளாந்த போக்குவரத்தில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வலியுறுத்தி, விரைவில் உரிய நடவடிக்கைகளில் களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே