வரி முகாமைத்துவ மறுசீரமைப்பு – டிஜிட்டல் மயமாக்கலின் அவசியம் வலியுறுத்தல்
இலங்கையின் நிதிச் செயற்பாடுகள், வரி வருமான சேகரிப்பின் முன்னேற்றம் மற்றும் வரி முகாமைத்துவ மறுசீரமைப்புகள் தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2026ஆம் ஆண்டுக்கான வரித் திட்டம், ஜூன் 30ஆம் திகதி வரையான வரி வருமான சேகரிப்பின் முன்னேற்றம், வருமான மதிப்பீடுகள், வரி வகைகளின் செயல்திறன், வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி இணக்கத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், வரி முறையை எளிமைப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், RAMIS முறைமையை மேம்படுத்துதல், மின்னணு பதிவுகள் மற்றும் வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் வசதிகளை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
அண்மைக்கால வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் வருமான முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் நிதித் துறையில் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த, வரி நிர்வாகத்தை நவீனமயப்படுத்துதல், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளை வரி வலையமைப்பிற்குள் கொண்டுவருதல், தொழில்நுட்ப முறைமைகளைப் புதுப்பித்தல், தரவு ஒருங்கிணைப்பில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் மற்றும் தேவையான மனித வளங்களை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே