இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 7,000 உயிரிழப்புகள் – வீட்டுக்குள்ளும் பதுங்கியிருக்கும் ஆபத்து!
முன்னொரு காலத்தில் பெரும்பாலும் புகைப்பிடித்த ஆண்களிடையே அதிகமாகக் காணப்பட்ட நுரையீரல் புற்றுநோய், தற்போது புகைப்பிடிக்காத பெண்களிடமும் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு வீட்டுக்குள்ளான புகை மாசுபாடும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
பொதுவாக காற்று மாசுபாடு என்றால் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையையே பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், வீட்டுக்குள்ளேயே உருவாகும் காற்று மாசுபாடு, சில சந்தர்ப்பங்களில் வெளிப்புற காற்று மாசுபாட்டைவிட அதிக ஆபத்தானதாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுகாதார அமைச்சின் தகவலின்படி, காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் சுமார் 7,000 பேர் உயிரிழக்கின்றனர்.
இதில், வீட்டுக்குள் ஏற்படும் புகை மாசுபாடும் முக்கிய பங்காற்றுகிறது. கிராமப்புறங்களில் இன்னும் பல குடும்பங்கள் விறகு அடுப்பு, கரி அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சமையல் செய்கின்றன.
போதுமான காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் இந்த எரிபொருட்களிலிருந்து வெளியேறும் புகை வீட்டுக்குள்ளேயே தேங்கி, குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதனை சுவாசிக்கும் நிலை உருவாகிறது.
சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு தெரிவிப்பின்படி, வீட்டுக்குள்ளான காற்று மாசுபாடு வெளிப்புற காற்று மாசுபாட்டைவிட சுமார் 5 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்.
சமையலறைகளில் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்வது, சுத்தமான எரிபொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் புகை வெளியேறும் வசதிகளை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த அபாயத்தை குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே