ஒரே தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க அநுராதபுரத்தில் போராட்டம்!
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாக்கும் கோரிக்கையுடன் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பாடசாலையின் நிலப்பரப்பில் இருந்து கடந்த காலங்களில் பல பகுதிகள் பல்வேறு அரச நிறுவனங்களின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி உட்பட சுமார் ஒரு ஏக்கர் காணியை, அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்காக ஒதுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான எந்தவொரு முன் அறிவிப்பும் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திச் சங்கம் அல்லது அதிபருக்கு வழங்கப்படாமல், காணியை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நடவடிக்கை அப்பகுதி தமிழ் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வட மத்திய மாகாண ஆளுநரிடம் அமைதியான முறையில் மனுவொன்றை கையளித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பாடசாலையின் கணிசமான நிலப்பரப்பு பல்வேறு தேவைகளுக்காக இழக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள காணியை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, எதிர்கால கட்டட விரிவாக்கம் மற்றும் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே