மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கு 50,000 ரூபா அபராதம்
புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அந்தப் பாம்பை விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் குறித்த இளம் பெண்ணும், மலைப்பாம்பை பணம் பெற்றுக்கொண்டு வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதன்படி, பாதுகாக்கப்பட்ட விலங்கொன்றை வைத்துக்கொண்டு நடனமாடிய குற்றத்திற்காக இளம் பெண்ணுக்கு 50,000 ரூபா அபராதமும், பாதுகாக்கப்பட்ட விலங்கை வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய நபருக்கு 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“வனவிலங்குகளைப் பாதுகாப்போம்; சட்டவிரோதச் செயல்களைத் தவிர்ப்போம்” எனவும் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே