நீர்கொழும்பு சிறை மோதல்: சாட்சியங்களை வெளியிட நீதிமன்றம் தடை!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சம்பவத்தன்று கடமையில் இருந்த பிரதம சிறைச்சாலை அதிகாரி அளித்த சாட்சியங்களை ஊடகங்கள் வெளியிட நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கண்டிப்பான தடை விதித்துள்ளது.
10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அவரது வாக்குமூலத்தில் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய மிக முக்கிய மற்றும் உணர்வுபூர்வமான தகவல்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவித்த நீதவான், அச்சாட்சியங்களை எந்தவொரு ஊடகமும் வெளியிடக் கூடாது எனக் உத்தரவிட்டார்.
மேலும், அச்சாட்சிப் பதிவை மிகப்பத்திரமாக நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறு பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
விசாரணையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 89 சிறைக் காவலர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் கொழும்பு, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையைச் சிறைச்சாலைத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே