போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்: படகில் தப்பிய இருவர் இந்தியாவில் சிக்கினர்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இருவர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்தபோது, கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியா செல்லும் பயணத்திற்காக சுமார் 3 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.
விசாரணையில், இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் இலங்கையில் நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே