“வெற்றி நமதே – ஊர் எமதே”: கிளிநொச்சியில் வீதிப் பராமரிப்புப் பணிகளுக்கு புதிய மோட்டர் கிரேடர்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீதிகளின் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மிகவும் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றத்திற்கு புதிய மோட்டர் கிரேடர் (Motor Grader) கனரக இயந்திரம் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தீவிர முயற்சியின் பலனாகவே இந்த இயந்திரம் மாவட்டத்திற்குப் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகளைச் சமப்படுத்துதல், கிராமிய மண் வீதிகளைப் சீரமைத்தல் மற்றும் மழைக்காலங்களில் சேதமடையும் போக்குவரத்துப் பாதைகளை உடனடியாகப் பராமரித்தல் போன்ற பணிகளுக்கு இந்த இயந்திரம் நேரடியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் உள் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வீதிச் சிரமங்களுக்கும் விரைவான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வெற்றி நமதே – ஊர் எமதே” என்ற தொனிப்பொருளின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளைப் பலப்படுத்தி, பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிசெய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இப் புதிய இயந்திரத்தின் வருகை கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என பிரதேச மக்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே