பணமோசடி சட்டத்தால் புலிகளின் கறுப்பு பணம் நாட்டிற்குள் வரும் - அடித்துக் கூறுகிறார் விமல்!!

#SriLanka #Wimal Weerawansa #money #LTTE #ADDA #ADDAFLY #ADDAPOOJA #Money laundering
Thamilini
3 hours ago
பணமோசடி சட்டத்தால் புலிகளின் கறுப்பு பணம் நாட்டிற்குள் வரும் - அடித்துக் கூறுகிறார் விமல்!!

 பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு கறுப்புப் பணத்துக்குப் பெரிய கதவு திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

 கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு கறுப்புப் பணத்துக்குப் பெரிய கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும்போது, நாட்டின் காணி நிலங்களையும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள சொத்துக்களையும் அவர்களால் எளிதாக வாங்க முடியும்.

 அதற்குத் தடையாக இருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இல்லாது ஒழிக்கும்போது, அதன் கீழ் இருந்த வடக்கு மற்றும் கிழக்கின் அனைத்து காணி நிலங்களும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு செல்லப்பட்டு, அந்தக் கறுப்புப் பணத்தைக் கொண்டு தமக்குத் தேவையான சொத்துக்களை தடையின்றி வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்படுகின்றது.

 சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைந்து மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை விற்க முற்படும் போது, அந்த முக்கிய இடங்களை மிக மலிவான விலைக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகும். 

இதற்குத் தடையாக இருக்கும் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்துக்கும், தொல்பொருள் சட்டத்ததுக்கும் இப்போது சூழ்ச்சி செய்யப் போகிறார்கள். இந்தத் துரோகங்களுக்கு எதிராகப் போராடக்கூடிய பௌத்த துறவிகளையும் சமூகக் கட்டமைப்பையும் அடித்து வீழ்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 அரசாங்க அமைச்சர்களின் சொத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறித்தோ அல்லது அசோக ரன்வலவின் போலி கலாநிதி பட்டம் குறித்தோ எவ்வித விசாரணைகளும் நடத்தப்படுவதில்லை. 

மாறாக, ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குள் நுழைத்துக் கொண்டு, சட்டமா அதிபர் ஆகும் பேராசையோடு இருக்கும் சிலரை நீதிமன்றங்களுக்கு அனுப்பி, பேச்சுச் சுதந்திரத்தை முடக்கி சமூகத்தை முடக்குவதே இவர்களின் நோக்கமாக உள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4