மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை - ரஞ்சித் மத்தும பண்டார !
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அரசு தனது முடிவை எடுப்பதற்கு மேலதிகமாக மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளது.
இதனால் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதில் தொடர்ச்சியான தாமதங்கள் நீடித்து வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் எவையும் காணப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்திலேயே நான், மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தோம்.
எனினும், அரசின் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக்கெடுவைத் தாண்டியும் இந்தச் செயன்முறை நீண்டு செல்கின்றது. பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதே எதிர்க்கட்சியின் முதன்மை முன்மொழிவாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே