எல் நினோ, விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி தொடர்பான தயார்படுத்தல்கள் குறித்து ஜனாதிபதி ஆய்வு!
பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் அதற்குப் பதிலளிப்பதை விடுத்து, அனர்த்தங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொறிமுறையை யதார்த்தமாக்குவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எல் நினோ (El Niño) நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் பூர்வாங்கத் தயார்படுத்தல்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
வனவிலங்கு வலயங்களுக்குள் நீர் பற்றாக்குறை ஏற்படுவதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
டித்வா பேரிடரின் போது எந்தவொரு பேதமுமின்றி கூட்டாகச் செயற்பட்டு அந்த சவாலுக்கு முகங்கொடுத்த விதத்தை நினைவு கூர்ந்ததுடன், அந்த நடைமுறையை மேலும் அபிவிருத்தி செய்து, தேவையான சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே