சாவகச்சேரியில் பதற்றம்: உப தவிசாளர் நீக்கத்திற்கு எதிராக நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (26)முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க சாவகச்சேரி வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் விசாரணைப் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள சாவகச்சேரி வர்த்தகர் சங்கம், குறித்த பதவி நீக்கம் நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் உணவகங்களையும் முழுமையாக மூடி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மண்ணின் உரிமை மற்றும் நீதிக்காக முன்னெடுக்கப்படும் இந்த அறப்போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சாவகச்சேரி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே