மல்லாகம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் இலங்கை ICT Lawyers’ Guild இணைந்து நடத்திய டிஜிட்டல் சட்ட விழிப்புணர்வு மாநாடு!
வடமாகாணத்தில் சட்டத்தரணிகளுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ICT Law Seminar in Digital Lawyering” (டிஜிட்டல் சட்டத்தரணித்துவத்திற்கான ஐசிடி சட்டக் கருத்தரங்கு) நிகழ்வில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
மல்லாகம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் இலங்கை ICT Lawyers’ Guild ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த முக்கியத்துவமிக்க விழிப்புணர்வு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருந்தன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, டிஜிட்டல் யுகத்தில் சட்டத்துறையின் சவால்கள் மற்றும் மாற்றங்கள் குறித்துப் பின்வருமாறு சுட்டிக்காட்டினார்:
இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், சட்டத்துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து முன்னேற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குறிப்பாக, இணையச் சட்டம் (Cyber Law), மின்னணு சான்றுகள் (Electronic Evidence), சைபர் குற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய சட்ட நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை சட்ட வல்லுநர்கள் மத்தியில் மேம்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
மின்னணு ஆதாரங்களைக் கையாளுதல், இணையப் பாதுகாப்பு (Cyber Security) மற்றும் நவீனம் பெற்றுவரும் சைபர் குற்றங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கேற்ப, எமது பிராந்திய சட்டத்தரணிகளின் ஆளுமைகளையும் திறன்களையும் வலுப்படுத்துவது இக்காலப்பகுதியில் அவசியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் இத்தகையதொரு காலோசிதமான மற்றும் உயர்தரமான மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மல்லாகம் வழக்கறிஞர் சங்கத்திற்கும், ICT Lawyers’ Guild of Sri Lanka அமைப்பிற்கும், தமது அறிவையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
(வீடியோ இங்கே )