இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றி: அடுத்த வாரம் IMF செயற்குழுவின் விசேட பரிசீலனை!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் சாதகமான முறையில் முன்னோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) 5ஆவது மற்றும் 6ஆவது மதிப்பாய்வுகள் கூட்டாக அடுத்த வாரம் IMF செயற்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அதன் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
700 மில்லியன் டொலர் நிதி: IMF செயற்குழு (Executive Board) இந்த ஒருங்கிணைந்த மதிப்பாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படும்.
bordஇதன் மூலம், இந்த கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக (SDR 1,778 மில்லியன்) அதிகரிக்கும்.
கடந்த சில வருடங்களில் இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் இலங்கை அதிகாரிகள் "விதிவிலக்கான முன்னேற்றத்தை" அடைந்துள்ளதாக நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளதுடன், உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதி வரிகள் மற்றும் முறையான வரி வசூலிப்பு நடவடிக்கைகள் காரணமாக 2025 இல் வலுவான நிதி நிலைத்தன்மை எட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற சவால்கள் உள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய இலங்கையின் கொள்கை கட்டமைப்பு மிகவும் வலுவான மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து பேண நிலையான கொள்கை வழிகாட்டுதல்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ள நாணய நிதியம், பின்வரும் விடயங்களில் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது:
வரி ஏய்ப்புகளைத் தடுத்து, வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல்களை மேலும் வலுப்படுத்துதல்.
2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து மிக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், இந்த மதிப்பாய்வு குறித்த இறுதி முடிவு மே 27 ஆம் திகதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )