கடவுச்சீட்டு மற்றும் தரவு கையாளுதலில் முறைகேடு; குடிவரவுத் திணைக்கள உயர் அதிகாரி கைது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திணைக்களத்தின் உள்ளகத் தரவுகளை முறையற்ற வகையில் கையாண்டமை மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்ட சில நபர்களின் தகவல்களை, திணைக்களத்தின் கணினி அமைப்பில் (System) இருந்து சட்டவிரோதமாக நீக்கியதாக அல்லது மாற்றியமைத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தரகர்களுடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
திணைக்களத்தின் உயர் மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட புகாரையடுத்து, நீண்டகாலமாக சிஐடியினரால் முன்னெடுக்கப்பட்ட ரகசியக் கண்காணிப்பின் பலனாகவே இவர் தற்போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, இந்த மோசடியில் திணைக்களத்தின் வேறு உயர் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் சிஐடியினர் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
(வீடியோ இங்கே )