கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள் : ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!
வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) இடம்பெற்றது.
இதன்போது டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக நட்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விரிவாக கேட்டறிந்தார்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த அவர், வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள், தற்போதுள்ள மழைக்காலத்துடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.
அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறும், அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
(வீடியோ இங்கே )