மினி சூறாவளியால் சிதைந்த பரந்தன் சந்தை: திருத்தப்படாத கூரைகள் - மழையில் நனையும் வியாபாரிகள்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வீசிய மினி சூறாவளியினால் சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதி, இன்று வரை புனரமைக்கப்படாமல் உள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சூறாவளியால் கூரைகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்ட நிலையில், தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக வியாபார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
சந்தைக் கட்டடத்தின் கூரை இல்லாததால், விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் காய்கறிகள் மழையில் நனைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள் பாரிய பொருளாதார நஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாலும், போதிய வசதிகள் இன்மையாலும் நுகர்வோர் சந்தைக்கு வருவது பெருமளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தச் சந்தை தொகுதியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கவனத்தில் கொண்டு விரைவாகப் புனரமைத்துத் தர வேண்டும் எனவும், மழையில் நனைந்தபடி வியாபாரம் செய்யும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )