முல்லைத்தீவில் இன்று முதல் அஞ்சல் வாகன சேவை ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பிற்கான அஞ்சல் பரிவர்த்தனைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை அஞ்சல் திணைக்கள வாகனம் மூலம் இடம்பெற்று வந்ததாகவும், அதன் பின்னர் உரிய வாகன வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஞ்சல் விநியோக தாமதங்களால் நேர்முகத் தேர்வு அழைப்புகள் உள்ளிட்ட முக்கிய கடிதங்கள் கூட தாமதமாக மக்களிடம் சென்றடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த மாதம் பாராளுமன்ற அமர்விலும் இவ்விடயம் முன்வைக்கப்பட்டதாகவும், அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அஞ்சல் வாகனம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் (07) பாராளுமன்றத்தில் மீண்டும் இவ்விடயம் குறித்து குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், “முல்லைத்தீவு மாவட்டம் மீண்டும் புறக்கணிக்கப்படுகின்றதா?” அஞ்சல் வாகனம் ஏன் அனுப்பப்படவில்லையென கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக அஞ்சல் வாகனம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வவுனியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அஞ்சல் வாகனம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு ஊடாக விசுவமடு வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும், இதன் மூலம் விரைவு அஞ்சல் சேவைகளை துரிதமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் இனிமேல் அஞ்சல் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்ட அவர், இச்சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அஞ்சல் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.