118 உறுப்பினர்களின் ஆதரவைக் கோருகிறார் ஆளுநர்: மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கோரிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதில் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
தவெக-வின் 108 மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 என மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் சமர்ப்பித்துள்ளார். ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
118 உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுப் பட்டியலைச் சமர்ப்பித்தால் மட்டுமே ஆட்சியமைக்க உரிமை கோர முடியும் என ஆளுநர் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று நடைபெறவிருந்த விஜயின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அடுத்தகட்டத் திட்டங்கள் மற்றும் ஆதரவு திரட்டுதல் குறித்து விளக்கமளிக்க ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கோரியுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 5 உறுப்பினர்களின் ஆதரவை விஜய் யாரிடமிருந்து பெறப்போகிறார்?
சுயேச்சைகளா அல்லது பிற கட்சிகளா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக-வின் இந்த அடுத்தகட்ட நகர்வு தமிழகத்தில் புதிய ஆட்சி அமையுமா அல்லது அரசியல் நெருக்கடி நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.
(வீடியோ இங்கே )