அதிகாரத்துக்காக பிணத்தை கூட விற்கும் நிலை - பாராளுமன்றத்தில் சொற்போர்!
அதிகாரத்துக்காக பிணத்தை கூட விற்கும் நிலைக்கு எதிர்கட்சியினர் தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரியது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் மோசடியாளர்களின் கைகளில் சிக்கியுள்ள நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியல் நோக்கங்களுக்காக உண்மைகளை திரிபுப்படுத்தி பேசுகிறார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடியை அரசாங்கம் மறைக்கவில்லை. இந்த மோசடியின் உண்மையை அறிவதற்காகவே பல தரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருடர்கள் தம்மை திருடர்கள் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எதிர்க்கட்சியின் திருடர்கள் தமது ஊழலை சமப்படுத்த அரசாங்கத்தின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், சிதறியுள்ள எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று தற்போது கேள்கிறார்கள். உண்மையை கண்டறியும் நோக்கம் இவர்களுக்கு இல்லை. அரசியல் செய்வதற்கு ஏன் இதனை முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்றே கருதுவார்கள்.
மஹிந்த - கோட்டாவின் காலத்தில் ஊழல் மோசடி பற்றி பேசாமல் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த இந்த எதிர்க்கட்சியினர் இன்று ஊழலுக்கு எதிரானவர்களை போல் பேசுகிறார்கள்.கடந்த கால ஊழல் பற்றி விசாரணைகளை தற்போது துரிதப்படுத்தியுள்ளதால் இவர்கள் திணறுகிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது அச்சம் கொள்ளவில்லை. ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் தான் அரசாங்கத்தின் மீது அச்சமடைந்துள்ளார்கள். முறையான வழக்குகள் தாக்கல் செய்யப்படும். விசாரணைகளுக்கு தயாராகுங்கள் திணற வேண்டாம்.திருடர்களை பிடிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்தோம் என்பதை நாங்கள் மறக்க போவதில்லை.நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்றார்.
(வீடியோ இங்கே )