2.5 மில்லியன் டொலர் மோசடி : திறைசேரி உதவிப்பணிப்பாளரின் மரணம் சந்தேகத்துக்கிடமானது!
மே தின கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை பற்றி ஜனாதிபதி, ஆளும் தரப்பினர் பேசவில்லை. எம்மை சிறைக்கு அனுப்புவது பற்றியே பேசுகிறார்கள். இவ்வாறான அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் அச்சமடைய போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி விகாரையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகள் போலியானவை என்று மக்கள் இன்று விளங்கிக் கொண்டுள்ளதால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவர்களின் அரசியல் கொள்கை இதுவே.
பொய்களை நாங்கள் சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசாங்கத்துக்கு கிடையாது. வழக்குகளை குறிப்பிட்டு எம்மை அச்சுறுத்த முடியாது. யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும், யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பெலவத்த கட்சி காரியாலயமே தீர்மானிக்கிறது.
மே தின கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை பற்றி ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர் பேசவில்லை. எம்மை சிறைக்கு அனுப்புவது பற்றியே பேசுகிறார்கள். இவ்வாறான அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் அச்சமடைய போவதில்லை.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம். 323 கொள்கலன்கள் விடுவிப்பு பற்றி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்த டான் பிரசாத் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் திறைசேரியின் முன்னாள் உதவி பணிப்பாளர் உயிரிழந்துள்ளார். இது சந்தேகத்துக்கிடமானது” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )