அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் உடனடித் தாக்குதல் நடத்தத் தயார் - ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடங்கினால், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது உடனடித் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி தெரிவித்துள்ளதாவது,
"எங்கள் வலிமைமிக்க படைகள் நீண்டகாலமாகவே 100 சதவீத தயார் நிலையில் உள்ளன. நாங்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே கை வைத்துள்ளோம். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும்."
பாகிஸ்தான் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்தத்தை நீடிப்பதாக அறிவித்திருந்தது.
இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டிற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, ஈரான் இராணுவத்திடமிருந்து இந்த ஆவேசமான அறிக்கை வெளியாகியுள்ளது.