"அரசியல் கைதுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்" - டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்.
அரசியல் ரீதியான கைதுகள் உட்பட எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் வாழ்வில் சவால்கள் ஏற்படுவது இயல்பானது எனக் குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் அரசியல் ரீதியான கைதுகள் இடம்பெற்றாலும், கட்சியின் செயல்பாடுகள் எவ்வித தொய்வுமின்றி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், கடந்த கால சேவைகளின் அடிப்படையில், இன்றைய அரசியல் சூழலில் ஈ.பி.டி.பி கட்சியின் தேவை அதிகமாக உணரப்படுவதாகவும், இது மக்களின் உணர்வுகள் ஊடாக வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் கொள்கைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுப்பவர்கள் எவராயினும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தயார் எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் அடுத்தகட்டத் தலைமையை கட்டியெழுப்பும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் நலன் மற்றும் செயல்பாடுகளுக்கே அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே மக்களின் எதிர்கால அபிலாசைகளை வெற்றிகொள்ள முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
(வீடியோ இங்கே )