கடந்த 12 நாட்களில் நீரில் மூழ்கி 26 பேர் பலி; பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமும் (17) இரு வேறு இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மிஹிந்தலை - மரதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் 11 வயதுடைய மகனும், 12 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும், இரு சிறுவர்களும் எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெஹியோவிட்ட - ஹிங்குரலகந்த பகுதியில் சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக பதிவாகும் இவ்வாறான மரணங்களை அடுத்து, நீர்நிலைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
(வீடியோ இங்கே )