இயேசுவாக வேடமிடுபவர்கள் குறித்த திருச்சபையின் எச்சரிக்கை
மறைமாவட்ட மக்கள் போலியானவர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடியவரால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பிரஜை ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உடை மற்றும் தோற்றத்தில் நீர்கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளார். குறிப்பாக, அவர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்குச் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அங்கே தோன்றியதும், அங்கிருந்த மக்கள் சிலர் அவரை இயேசு என நினைத்து வழிபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் நீர்கொழும்பு Grand Street தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.
நிலைமையை உணர்ந்த அங்கிருந்த மதகுருக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றியதுடன், அவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்த ஊடகத் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த "மக்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்.
இத்தகைய போலியானவர்களைக் கண்டு ஏமாறக்கூடாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் பைபிளில் போதிக்கப்பட்டுள்ள உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )