மீண்டும் தொடங்குகிறதா ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை?
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்திலேயே மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா இராணுவ முற்றுகையை அமுல்படுத்தியுள்ள நிலையில், இந்த முக்கிய முன்னேற்றம் குறித்து தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மொஹமட் இஸ்லாமி (Mohammad Eslami) பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி நிறைவடைந்ததை தொடர்ந்து, அமெரிக்கா இந்த முற்றுகையை ஆரம்பித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இஸ்லாமி, அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது, பின்னணி வழிகளில் (Back-channels) இராஜதந்திரத் தீர்வுகள் குறித்து ஆலோசித்து வரும் ஈரானிய தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாகும்.டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தினால் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையூடாக நீண்ட காலத்திற்கு மூடி வைத்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி, "நேரடிப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத் அல்லது ஜெனிவாவில் இந்த வாரமே நடைபெறலாம்" என்ற எதிர்பார்ப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, தற்போது ஈரான் அரசு, பாகிஸ்தான், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )