நேட்டோவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா? - ட்ரம்ப் எச்சரிக்கை.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது குறித்துத் தாம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலில், நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவிற்குப் போதிய இராணுவ ஆதரவை வழங்கவில்லை என்ற அதிருப்தி ஜனாதிபதி ட்ரம்ப் தரப்பில் எழுந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் (Strait of Hormuz) பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஐரோப்பிய நட்பு நாடுகள் பின்வாங்குவது "ஏமாற்றமளிப்பதாக" அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நேட்டோ அமைப்பிற்காக அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பில்லியன் டொலர்களைச் செலவிடுகிறது. ஆனால், எங்களுக்குத் தேவைப்படும்போது அவர்கள் உதவத் தயாராக இல்லை.
இது ஒரு ஒருதலைப்பட்சமான உறவாகவே (One-way street) உள்ளது. இத்தகைய சூழலில், அந்த அமைப்பில் நீடிப்பது குறித்து நாம் ஏன் சிந்திக்கக்கூடாது?" என ட்ரம்ப் ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதன் பின்னர் நேட்டோவுடனான உறவை மீளாய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், நேட்டோவிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமா என்பது குறித்த விவாதங்களும் தற்போது அமெரிக்காவில் சூடுபிடித்துள்ளன.
(வீடியோ இங்கே )