பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு 'செக்' வைத்த பிரித்தானியா: 16 வயதுக் கட்டுப்பாடு மீண்டும் தீவிரம்.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபை மீண்டும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர் லார்ட் நாஷ் கொண்டு வந்த இந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 141 வாக்குகளும் கிடைத்தன.
இதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீறி பிரபுக்கள் சபை இரண்டாவது முறையாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த முன்மொழிவின்படி, எந்தெந்த சமூக ஊடகத் தளங்கள் 16 வயதிற்குட்பட்டோருக்குக் கிடைக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்க அமைச்சர்களுக்கு 12 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி இந்தத் தடையைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற விவாதத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, அரசாங்கம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
பிரித்தானியாவின் 300 பதின்ம வயது சிறுவர்களின் வீடுகளில் சமூக ஊடகத் தடைகள், டிஜிட்டல் ஊரடங்கு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் ஆகியவை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த முன்னோடித் திட்டம் 6 வாரங்களுக்கு நீடிக்கும். எனினும் மெட்டா மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அதேவேளை, டிக்டொக் மற்றும் எக்ஸ் நிறுவனங்கள் இந்த விடயத்தில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளன
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்