ஈரான் தாக்குதலால் உயர்ந்த பதற்றம்: அமைதிக்காக இந்தியா–பிரான்ஸ் இணக்கம்
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் நேற்று (19) விரிவாகக் கலந்துரையாடினர். வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
தமது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அதிபர் மேக்ரான், "பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கும், அமைதிக்கான எமது முயற்சிகளில் இராஜதந்திரத்தை மையமாக வைத்திருப்பதற்கும் இந்தியாவும் பிரான்சும் நெருக்கமாகச் செயல்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், மேக்ரானை ஒரு "நெருங்கிய நண்பர்" எனக் குறிப்பிட்டதுடன், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரப் பாதைக்குத் திரும்புவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என இந்தியா ஏற்கனவே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், இந்தத் தலைவர்களின் உரையாடல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )