போரின் 14வது நாள்: ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான தாக்குதல் நடத்துவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை
கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல், இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிராந்தியம் முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு, தெற்கு லெபனானின் நபதியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஈரானின் மத்திய மாகாணமான மார்க்காசியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைச் சமாளிக்க, அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 10,000 இடைமறிப்பு ஆளில்லா வானூர்தி;களை நிறுவியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைப் பற்றிய தகவல்களுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டொலர் வரை சன்மானம் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் நீண்ட கால மோதலுக்குத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசெம் அறிவித்துள்ளார்.
ஈரானில் ஆண்டுதோறும் நடைபெறும் 'அல்-குட்ஸ்' தின அணிவகுப்பில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று ஆதரவைத் திரட்டியுள்ளனர்.
இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 42 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
(வீடியோ இங்கே )