தடையற்ற எரிபொருள் விநியோகம்: இலங்கைக்கு இந்தியா வழங்கிய பதில்?
இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிடம் இலங்கை விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.
கடந்த மார்ச் 6ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நடத்திய சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். போர் நீடிக்கும் பட்சத்தில் எரிபொருள் கையிருப்புகளைப் பெறுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து அமைச்சர் ஹேரத் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.
இந்தநிலையில், இலங்கையின் இந்த வேண்டுகோளுக்கு இந்தியா சாதகமாகப் பதிலளித்துள்ளதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தேவையான எரிபொருள் இருப்புகளை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாடுகளும் ஏற்கனவே ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.
எதிர்காலத்தில் நிலவக்கூடிய நிச்சயமற்ற சூழலில், இலங்கையில் தடையில்லாத மற்றும் பாதுகாப்பான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )