ஈராக் கடற்பரப்பில் வெளிநாட்டு எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்!
ஈராக் நாட்டுக்குச் சொந்தமான எரிபொருள் எண்ணெயைச் (Fuel Oil) சுமந்து சென்ற இரண்டு வெளிநாட்டுத் தாங்கிக் கப்பல்கள், ஈராக்கிய கடற்பரப்பிற்குள் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்தத் தாக்குதலினால் இரண்டு கப்பல்களிலும் பெரும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து ஈராக்கிய துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஃபர்ஹான் அல்-ஃபர்தூசி (Farhan al-Fartousi) ரொய்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்ட இரண்டு கப்பல்களில் இருந்தும் 25 மாலுமிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கப்பல்களில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்த போதிலும், அவை இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது வெளிநாட்டு மாலுமி ஒருவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கிய எரிபொருள் ஏற்றுமதியைப் பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, அந்த பகுதியில் உள்ள எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )