யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் - துணைவேந்தரிடம் தீவிர விசாரணை
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ருவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி - அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழகப் பதிவாளரும் இன்று குற்றத் தடுப்புப் பொலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வந்த விசேட உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகளே இந்த விசாரணையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸ் அதிகாரிகள், துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலே இன்றைய விசாரணை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலீஸ் குற்றத்தடுப்பு பணியக வாகனம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்துக்குள் வந்து, அதிகாரிகள் பதிவாளர் அலுவலகத்தில் நீண்டநேரமாக வாக்குமூலம் பதிவு செய்து சென்றுள்ளமை மாணவர்கள் மத்தியில் தேவையற்றதொரு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்தை நேரில் கண்ட, தமது தொலைபேசிகளில் காணொலிப் பதிவு செய்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.