கடற்றொழில் படகுகளுக்கு காப்புறுதி மற்றும் புதிய விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்!
கடலில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், அனைத்து கடற்றொழில் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளுக்கு காப்புறுதி செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச, அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கடலில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பின்வரும் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து வகை கடற்றொழில் படகுகளும் கட்டாயம் காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கடலுக்குச் செல்லும் அனைத்து கடற்றொழிலாளர்களும் உயிர் காக்கும் அங்கிகளை அணிவது கட்டாயம். படகின் மாலுமி முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியம்.
பல நாள் இழுவைப் படகுகள் கரையை விட்டு வெளியேறும் போது, கடலோரப் பாதுகாப்புப் படையினர் கடற்றொழிலாளர் பாதுகாப்பு அங்கி அணிந்துள்ளதை உறுதி செய்கின்றனர். ஆனால், சிறிய படகுகளைக் கண்காணிப்பதில் சிக்கல் நிலவுவதாக செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
"சிறிய படகுகளில் செல்லும் கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய போதிய கண்காணிப்பு வசதிகள் இல்லை.
கடந்த கால விபத்துகளை ஆராயும்போது, கடற்றொழிலாளர்கள் இந்த விதிகளை அலட்சியப்படுத்துவது தெரியவந்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
படகுகளின் உறுதித்தன்மையை ஆண்டுதோறும் கடற்படை பொறியியலாளர்கள் ஆய்வு செய்த பின்னரே உரிமம் வழங்கப்படுகிறது. இது தவிர கடற்றொழிலாளர்களுக்கு சர்வதேச கடல்சார் சட்டங்கள் குறித்த பயிற்சி, கடலில் அவசர மருத்துவத் தேவை ஏற்பட்டால் முதலுதவி செய்வது குறித்த பயிற்சி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து விழிப்புணர்வுப் பயிற்சிகள் என்பன வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்
முறையான பயிற்சி இல்லாத நபர்கள் சிறிய படகுகளில் பணியமர்த்தப்படுவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும், இதனைத் தவிர்க்க கடற்றொழிலாளர் சமூகத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்