இலங்கை மின்சார சபை கலைப்பு - 6 புதிய நிறுவனங்கள் உதயம்
இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1969-ஆம் ஆண்டு 17-ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும்.
2024-ஆம் ஆண்டின் 36-ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று (9) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையினால் நாட்டில் மின் உற்பத்தி அல்லது மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.