ஈரானியக் கப்பல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் சேதமடைந்த இரானியக் கப்பல் மற்றும் மற்றுமொரு கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசும் பாதுகாப்புப் படையினரும் பாரிய சட்ட மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போர் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) கப்பல் மீது கடந்த 4ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 87 படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
அத்துடன், கொழும்பு கடற்பரப்பில் இருந்த மற்றொரு கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோர் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான உடன்படிக்கைகளுக்கு அமைய இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புகளுக்கு இடையே போர்ச் சூழல் நிலவும் வேளையில், இலங்கை அரசு ஒரு மனிதாபிமானப் பொறுப்பையே நிறைவேற்றுவதாக சர்வதேச இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், மீட்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு வருவது போன்ற விடயங்கள் பாதுகாப்புப் பிரிவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, மத்திய கிழக்கு பதற்றத்தை அடுத்து இலங்கையிலுள்ள 85 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இலங்கை கடற்பரப்பில் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்