ஈரான் மீதான போரின் வேகம் குறையாது : நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்- டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்த அவர், இந்த இராணுவ நடவடிக்கை நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திலேயே நிறைவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால், அதன் வலிமைக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை தாம் கணக்கிட்டுள்ளதாக அவர் விபரித்துள்ளார். அதேசமயம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறுமா என்பது குறித்து அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை. ஈரானிய தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், ஆனால் அவர்கள் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதன் அனைத்து இலக்குகளையும் எட்டும் வரை முழு வீச்சில் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், ஈரானுடனான இந்த மோதலில் இதுவரை மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்கத் தரப்பில் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இறுதியில் இந்த நடவடிக்கை உலகிற்கு ஒரு நன்மையாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )