ஈரானிய உச்ச தலைவர் மரணம் - உலக நாடுகள் கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களில் வீழ்த்தப்பட்ட மூன்றாவது ரஷ்யக் கூட்டாளி கமேனி ஆவார்.
முன்னதாக சிரியா மற்றும் வெனிசுலாவில் மாஸ்கோவின் ஆதரவு பெற்ற தலைவர்கள் வீழ்ந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் உயர்மட்டத் தலைவர் சையத் அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மனித அறநெறி மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளையும் அப்பட்டமாக மீறும் வகையில் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என புதின் குறிப்பிட்டுள்ளார்.
சீனா
இந்தத் தாக்குதல் "ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறுவதாகும், ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளை மிதிப்பதாகும்" என்று தெரிவித்துள்ளது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை வெளிப்படையாகக் கொல்வதும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ தெரிவித்துள்ளார்.
வட கொரியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை "சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் அதன் கூட்டாளியும் "சுயநல மற்றும் மேலாதிக்க அபிலாஷைகளை" நிறைவேற்றுவதற்காக இராணுவ பலத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், "வெட்கமற்ற மற்றும் குண்டர் கும்பல் போன்ற நடத்தையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஏமன் ஹூத்திகள்
"இந்தக் கொடூரமான குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறலைக் குறிக்கிறது மற்றும் இஸ்லாமிய தேசத்தின் மீதான அநியாயத் தாக்குதலின் தொடர்ச்சியை உள்ளடக்கியது" என்று ஏமனில் உள்ள ஹூத்திகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ்
கமேனியின் மரணத்திற்கும் துக்கம் அனுசரிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. "அவர் எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்பிற்கும் அனைத்து வகையான அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவையும் வழங்கினார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு எதிரான இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் கொடூரமான குற்றத்திற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, அதன் கடுமையான விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )